Friday, January 23, 2026

புது மணத் தம்பதிகளின் சிறப்பு கவனத்திற்கு.......... சுவி. பாபு T தாமஸ்

 புது மணத் தம்பதிகளின் சிறப்பு கவனத்திற்கு.......... சுவி. பாபு T தாமஸ்

உங்கள் அனைவரையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு வேளை சமீபத்தில் மணம் முடித்தவர்களாகவும் இருக்கலாம், அல்லது விரைவில் திருமணம் முடிப்பவர்களாகவும் இருக்கலாம். நீங்கள் எல்லோரும் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியோடும் நீடுழி வாழ்ந்து தலைமுறை தலை முறையாக பலுகிப் பெருகி பூமியை நிரப்பி ஆண்டு அனுபவித்து வாழவேண்டும் என்பது எங்களின் மனப்பூர்வ அவா. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே. என்னிடத்தில் அன்புக் கூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். யாத்திராகமம் : 20 : 6. இது தான் இரகசியம், அதுவும் வெற்றியின் இரகசியம் இதுவே. சரி, அப்படியானால் அன்புகூருவது என்பது என்ன? எப்படி? என்கிற கேள்விக்கு பதிலை தொடர்ந்து பார்ப்போம்.
1. ஜெபம் : ஜெபமே ஜெயம். ஜெபம் தான் நமக்கான ஒரே ஆயுதம். ஜெபம் தான் நம்மை படைத்த தேவனை தொடர்புப் படுத்தும் பாலம். இந்த ஜெபங்களில் பிரதானமானது தனி ஜெபமும் குடும்ப ஜெபமுமாகும். இந்த ஒரே ஆயுதத்தை பயனப் படுத்தி நம்மால் எதையும் சாதிக்கவும் ஜெயிக்கவும் முடியும். ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். மாற்கு : 11 : 24
2. பரிசுத்த வேதாகம தியானம் : பரிசுத்த வேதாகமத்தை நாம் அனுதின தியானமாக மாற்றுவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் உண்டு. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் : 1 : 2
3. ஆலயம் தவறாமை : நாம் எப்பொழுதும் ஒய்வு நாளை பரிசுத்தமாய் ஆசாரிக்க நினைக்க வேண்டும். ஆகவே ஒரு நாளும் தாமதமாகவோ, ஒரு வாரமும் தவறாமலும் ஆலயம் சென்று தேவனை தொழுதுக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வு எப்பொழுதும் நமக்கிருக்க வேண்டும். சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். எபிரேயர் : 10 : 25.
4. கோபம் கொள்ளுதல் கூடாது : கோபம் கொள்ளுதல் சண்டையிடுதல் எவ்வளவும் குடும்பத்திற்கு ஆகாது. ஆகவே விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போனதில்லை. எனவே ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ பழக வேண்டும். உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும். பிரசங்கி : 7 : 9.
5. மன்னிப்பு : நேற்று வரை வெவ்வேறு சூழ்நிலை தன்மைகளுடன் வாழ்ந்த நீங்கள் தான் இன்று ஈருடல் ஓருயிராக இணைத்திருக்கிறீர்கள். ஆரம்பத்தில் ஒருவரின் தன்மையும் வேற்றுமையும் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் காலம் செல்லச் செல்ல சுபாவம் வெளிப்படத் தொடங்கும் பொழுது கணவன் மனைவியானவர்கள் அகங்காரம், அகந்தை, இறுமாப்பு, திமிர், தற்பெருமை, நான் எனும் உணர்வு அனைத்தையும் விட்டு விட்டுக்கொடுத்து வாழப் பழக வேண்டும். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; எபேசியர் : 4 : 26.
6. போதும் என்கிற மனம் வேண்டும் : உள்ளதே போதும் என்ற மனநிறைவோடிருப்பதே நலம். போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். I தீமோத்தேயு : 6 : 6.
7. தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து அவருடனான உறவை உயிர்ப்போடு வைத்துக் காத்துக் கொள்ள வேண்டும் : அவர் நம்முடைய தேவன் நாம் அவருடைய பிள்ளைகள் என்கிற நினைப்பு எப்பொழுதும் நமக்குள் பசுமையாக இருக்க வேண்டும். அதற்கேற்ப நமது நடைமுறை கலாச்சார முறைமைகளை பரிசுத்த வேதாகம முறைமைகளுக்கு ஏற்ப நாம் நம்முடைய வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முதற்படியாக அன்னாளின் ஜெபம் செய்ய வேண்டும். சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள். I சாமுவேல் : 1 : 11.
ஆகா இது தான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படை. இந்த அடிப்படைகளை கைக்கொண்டு வாழ்ந்தால் பல தலைமுறை தலை முறைகளை நீங்கள் காண முடியும். பலப்பல நன்மைகளை பெற்று வளமாய் வாழவும் முடியும், ஆமென்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,

Ranipet - 632 401, Tamil Nadu, South India.

No comments:

Post a Comment