Friday, October 31, 2025

பெயர் காரணம் அல்லது காரணப்பெயர்! சுவி. பாபு T தாமஸ்

 பெயர் காரணம் அல்லது காரணப்பெயர்! சுவி. பாபு T தாமஸ்


நம்முடைய பகுதிகளில் வசிக்கும் நபர்களின் பெயர்களை வைத்து அவர் யார்? எந்த சமயத்தை சார்ந்தவர் என்று சொல்லிவிட முடியும். இன்னும் ஒரு படி மேலே போய், ஒருவரின் வசிப்பிடத்தை வைத்து அவர் இன்னார் என்று சொல்லுமளவுக்கு நம்முடைய கலாச்சாரம் இருப்பது வியப்பே. குறிப்பாக ஒருவரின் பெயர் மாரியம்மா என்றதுமே அவர் இந்து என்றும், ஒருவரின் பெயர் மேரி என தெரிந்ததும் அவர் கிறிஸ்தவர் என்றும், ஒருவரின் பெயர் மிரியம் என்ற உடன் அவர் இஸ்லாமியர் என்று அறிந்துக் கொள்ளுமளவுக்கு நாம் அறிவு ஜீவிகள் என்பது பெருமைக் குரிய விஷயமே. எனினும் பரிசுத்த வேதாகமம் இது குறித்து நமக்கு சொல்லுவது என்ன என்பதை சற்றே கவனிப்போம். முதலில் பரிசுத்த வேதாகமம் என்பது ஒரு பொது மறை நூல், அது கிறிஸ்தவர்களுக்கான நூலோ அல்லது அவர்கள் மட்டுமே பயன் படுத்த வேண்டிய சமய நூல் என்று நினைப்பதே தவறானது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானவர் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே சொந்தமான கடவுளும் இல்லை என்பதை நாம் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
வான் தூதர்கள் அல்லது தேவ தூதர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மனு மக்களுக்கு எப்படி? என்ன சொல்லி அறிவித்தார்கள் என்று பாப்போம். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். லூக்கா : 2 : 10-14 அப்படியானால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லா மக்களுக்காக இந்த பூமியில் அவதரித்தார் என்பது தான் உண்மை. ஆகவே தான் அவரை நாம் உலக இரட்சகர் என்று போற்றுகிறோம். இங்கே நம் பூமியில் காணப்படும் சமய பிரிவுகளெல்லாம் மனித மூளையில் ஏற்பட்ட கோளாறினால் பிறப்பிக்கப்பட்டவை என்று யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிரிவுகளையும், பிளவுகளையும் கர்த்தர் எக்காலத்திலும் அனுமதிப்பதே இல்லை. அப்படியே பெயர் பிரிவினைகளும் மனிதன் உண்டாக்கிக் கொண்டதே ஒழிய கடவுளால் உண்டானது அல்ல. எனினும் பரிசுத்த வேதாகமம் பெயர்களை குறித்து சொல்லுவதை தெளிவாகப் பார்ப்போம்.
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு : 1 :18,21 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இயேசு என்கிற பெயர் ஏன் அமையப்பெற்றது என்றால் பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லுகிறது, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்பதே. அப்படியானால் இயேசு என்பது ஒரு காரணப்பெயர். இப்படித் தான் பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் எல்லாப்பெயர்களும், அதாவது ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரையில் காணப்படும் எல்லாப்பெயர்களும் காரணப் பெயர்களே. சரி இன்னும் சில உதாரணங்களை நாம் பார்க்கலாம்.
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. ஆதியாகமம் : 16 : 11 ஆகார் எனும் எகிப்திய தேசத்து பெண் ஆபிரகாமின் மனைவி என்கிற அந்தஸ்தோடு கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெற சமயம் கூடி வரும் வேளையில், கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக என்று கூறுகிறார். அப்படியானால் இஸ்மவேல் என்பதும் ஒரு காரணப் பெயரே. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். ஆதியாகமம் : 17 :1 - 5 ஆக அபிராமாய் இருந்த ஆபிரகாமை ஆபிரகாமாக மாற்றியதற்கு பின்னால் இருப்பதும் ஒரு காரணமே. ஆகவே இதுவும் ஒரு காரணப் பெயரே.
லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.
அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டுவந்தாள். பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள். யாத்திராகமம் : 2 :1 - 10 இங்கேயும் மோசே என்கிற பெயருக்கு பின்னல் ஒரு காரணம் இருக்கிறது. ஆகவே இதுவும் ஒரு காரணப் பெயரே.
இன்னும் பிற காரணப் பெயர்களின் சில உங்கள் பார்வைக்கு. சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள். I சாமுவேல் : 1 : 20 பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள். அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை. தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள். I சாமுவேல் : 4 : 19 - 21 யோவான் ஸ்நானகன் : தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். யோவான் என்கிற பெயருக்கான பொருள் சந்தோஷம் - மகிழ்ச்சி. எந்த மகிழ்ச்சியை யோவானுக்கு பெயராக வைக்கப்பட்டதென்றால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் சந்தோஷத்தையே பெயராக யோவானுக்கு சூட்டப்பட்டது என்பதே பெயர் காரணத்தின் சிறப்பு.
இது தான் பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லும் உண்மையும், நடைமுறையாகும். ஆனால் நாம் கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு நாம் செய்யும் பித்தலாட்டங்கள் மிகக் கொடுமையானது. எப்படியெனில், எப்படி பாபிலோனுக்கு சிறைகளாக கொண்டு போன யூதர்களை பாபிலோனிய முறையில் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டதோ, அதே முறையை நாமும் பின்பற்றுவது கொடுமையில்லையா? அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். தானியேல் : 1 : 6 - 7 இதில் இன்னும் மேலே போய் சாத்ராக், மேஷாக் என்கிற பாபிலோனிய பேர்களையே தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்க்கும் கிறிஸ்தவர்களை என்னவென்று சொல்லுவது. நாம் நம் பிள்ளைகளுக்கு இஸ்மவேல் என்கிற பேரை வைக்க மாட்டோம், ஒன்று அது இஸ்லாமியர்களின் பெயர் வகையறாவை சேர்ந்தது. மற்றொரு காரணம் பெயருக்கு பின்னல் வேல் வருவதால் அது இந்து என்ற தோற்றத்தை தருமாதலால் நாம் தவிர்ப்போம். இன்னொரு கொடுமை தான் கொடியது, அதாவது Antony, George, Xavier, Francis போன்ற பெயர்கள் கத்தோலிக்க திருச்சபை பெயர்களாதலால் சீர்திருத்த திருச்சபையை சார்ந்தவர்கள் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
கிறிஸ்தவமே மனம்திரும்பு, சத்திய வசனத்திற்கு நேராய் உடனே திரும்பு. நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. ஏசாயா : 1 : 19 - 20 அது தான் 2020 கொள்ளை நோய் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுவதில்லை, ஆமென்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu, South India.

Thursday, October 30, 2025

யார்? உங்கள் குடும்பத்திற்கு உத்தரவாதி! சுவி. பாபு T தாமஸ்

 யார்? உங்கள் குடும்பத்திற்கு உத்தரவாதி! சுவி. பாபு T தாமஸ்

இந்த கேள்விக்கு நம்முடைய பதில் பலவாறாக இருப்பினும், பொதுவான கருத்து என்பது குடும்பத்தலைவர் அல்லது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்பது பெருவாரியானவர்களின் அபிப்பிராயமாக உள்ளது. ஆனால் பரிசுத்த வேதாகமம் இதற்கு முறையான வழிகாட்டுதலை முன்வைக்கிறது. ஆனால் நாம் யாரும் இதை கவனித்ததாகத் தெரியவில்லை. என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். ஓசியா : 8 : 12. இதற்கு காரணம், அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. மாற்கு : 7 : 6-7,9 இங்கே அவரவருக்கான நீதி என்பதே பிரதானம். ஆனால் பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது, இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக. உபாகமம் : 12 : 8

ஆபிரகாமை அழைத்த தேவன், அவனுக்கு சொன்ன முதல் கட்டளை என்பது என்ன வென்றால், கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. ஆதியாகமம் : 12 : 1 அதாவது தேவன் முதலாவது ஆபிரகாமின் சுபாவத்தை மாற்ற விரும்பினார். In born nature என்று சொல்லப்படும் பழக்க வழக்கத்தை முற்றிலுமாக மாற்ற விரும்பினார் என்பதே எதார்த்தம். தேவை மனமாற்றம் மட்டுமே ஒழிய பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்பது ஏற்புடையது அல்ல. ஆகவே பல நுணுக்கமான காரியங்களை உள்ளடக்கி இருக்கிறது பரிசுத்த வேதாகமம். ஆகவே தான் பரிசுத்த வேதாகமத்தை நாம் அனுதின தியானமாக மாற்றவேண்டும் என்றும் பரிசுத்த வேதாகமம் வலியுறுத்துகிறது. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் : 1 : 2 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. 119 : 105 சரி விஷயத்திற்கு வருவோம், முதலாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குடும்பம் இதை எப்படி கையாண்டது என்று பார்ப்போம். முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும், லூக்கா : 2 : 23

அப்படியானால் நியாயப்பிரமானத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரிந்தால் தான் நமக்கு முழு விவரம் புரியும். முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக. யாத்திராகமம் : 22 : 29 அப்படியானால் நம்முடைய குடும்பங்களில் முதற்பேறான குமாரனே குடும்பத்தின் உத்திரவாதியாகக் கருதப்படுவான். நாம் இக்காரியத்தை நம்முடைய கவனத்தில் எடுத்துக்கொள்ளாததன் காரணமாகத்தான் கர்த்தர், நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். எசேக்கியேல் : 22 : 30 என்று ஆதங்கப்படுகிறார் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இது மாத்திரமல்ல முதற்பேறானவர்களுக்கென்று ஒரு விசேஷத்தையும் பரிசுத்த வேதாகமம் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது, பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், எபிரேயர் : 12 : 23 முதற்பேறானவர்களுக்கென்று ஒரு சர்வ சங்கமொன்று இயங்குகிறது என்பதையும் நாம் கவனிக்கத் தவறியிருக்கிறோம் என்பதை நாம் முதலாவது உணரவேண்டும்.


இறுதியாக ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன், நமது இந்திய தேசத்தின் அரசியமைப்பு சட்டதிட்டமும் ஆண்டவரின் திட்டங்களுக்கு ஒத்திருப்பது நமக்கெல்லாம் ஆச்சரியமே. நம்முடைய மாநிலங்களில் இருவர் முதன்மையானவர்கள் ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றொருவர் ஒன்றிய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநர். அது போலவே நம்முடைய குடும்பங்களின் பாதுகாப்பிற்கென்று நாம் நம் குடும்பங்களின் சார்பாக முதற்பேறான குமாரனை நாம் திறப்பிலே நிற்க வைப்பது மாத்திரமல்ல, பரலோகத்தின் சார்பாக நம் ஒவ்வொருவருக்காக தேவ தூதன் ஒருவன் நியமிக்கப்பட்டிருப்பது எத்துணை பொருத்தம் என்று எண்ணிப்பாருங்கள். இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு : 18 : 10 ஆகவே நாம் செய்யத் தவறியதை இன்றே சரி செய்து நம்முடைய தவறை நேர்செய்வோம். அப்போழுது தேவன் நம்மை அபரிதமாய் ஆசீர்வதிப்பார், ஆமென்.

Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation, Ranipet - 632 401, Tamil Nadu
https://ourshepherdsvoicefoundation.blogspot.com

Wednesday, October 22, 2025

முயற்சி - பயிற்சி! சுவி.பாபு T தாமஸ்

 


முயற்சி - பயிற்சி!

முயன்றால் மலையும் நமக்கு மடுவை போலத்தான் தெரியும். இது பொதுவாக எல்லாச் செயல்களுக்கும் பொருந்தக் கூடியதே. வாழ்க்கையில் வெற்றிப்பெற நினைக்கும் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல் முயற்சி - பயிற்சி ஆகும். அது சரி இங்கே நாம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அதி முக்கியமான வெற்றியின் ரகசியம் மூன்று 1. ஜெபம் 2. பரிசுத்த வேத தியானம் 3. ஓய்வு நாள் ஆசரிப்பு அல்லது ஆலயம் தவறாமை. இம்மூன்றும் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரமல்லாமல் அனைவருக்கும் பொதுவான மூன்று மூல மந்திரங்கலாகும். இதை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் தவறாமல் கடைப் பிடித்து வந்தால், அவரின் வாழ்க்கை ஏறுமுகமே. அதையும் மீறி அவருடைய வாழ்க்கையில் காணப்படும் சோதனைகள் யாவும் திருப்பு முனைக்கான யுக்தி அல்லாமல் வேறில்லை என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடியும்.
1. ஜெபம் : இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். I தெசலோனிக்கேயர் : 5 : 17. இந்த இடைவிடாத ஜெபம் எப்படி இருக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு தெரிவிப்பது என்னவெனில், நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் : 4 : 6 அது மாத்திரமல்ல, நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மத்தேயு : 26 : 41. அப்படியானால் நாம் விழிப்போடு இருந்து ஒன்றுக்கும் கவலைப்படாமல் ஸ்தோத்திரங்களோடு கூட நாம் நம் ஜெபங்களை ஏறெடுக்க வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் நம்மை வலியுறுத்துகிறது. இவ்விதமான ஜெபங்களை மூன்று வகையில் நாம் ஏறெடுக்க முடியும். 1. தனி ஜெபமாக 2. குடும்ப ஜெபமாக 3. கூட்டுப்பிரார்த்தனையாக நாம் நம்முடைய வேண்டுதல்களை கர்த்தரிடத்தில் ஏறெடுக்க முடியும்.
2.பரிசுத்த வேதாகம தியானம் : கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் : 1.2 நாம் பரிசுத்த வேதாகமத்தை தியானிப்பதற்கு ஒரு பிரதானமான நோக்கம் இருக்கிறது. பரிசுத்த வேதாகமம் நமக்கு வழிகாட்டி நூல் Guide Book / Rule Book என்று நாம் அதை கருத முடியும். ஏன் என்றுச் சொன்னால், உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் : 119 : 105 ஆகவே தான் வசனம் நமக்குச் சொல்லுகிறது, சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் : 8 : 32 அப்படியானால் நாம் வசனம் போதிக்கிறப்படி பாவத்தை தவிர்த்து, நீதிமான்களாக வாழப்பழக எத்தனிக்க வேண்டும். ஆகவே தான், . துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் : 1 : 1 - 2. எனவே தான் சங்கீதங்களின் புஸ்தகம் பாக்கியவானுக்குரிய தகுதியாக இரண்டு குறிப்புக்களை வெளிப்படுத்துகிறது.
3. ஓய்வு நாள் ஆசரிப்பு / ஆலயம் தவறாமை : சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். எபிரேயர் : 10 : 25 தேவனாகிய கர்த்தர், பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். ஆதியாகமம் : 2 : 18 . வசனம் நமக்கு அறிவுறுத்துகிறப்படி ஒவ்வொருவருக்கும் ஏற்ற துணையை கொடுத்து குடும்பங்களை உருவாக்கியிருக்கிறார். எனவே நாம் அனைவரும் குடும்பமாக ஆலயம் சென்று தேவனை தொழுவது மிக மிக அவசியம். நமக்கான ஆலோசனைகளை பரிசுத்த ஆவியானவர் எல்லோருக்கும் அருள்வார். ஆகா மேற்சொன்ன மூன்று முத்தான மந்திரங்களை மாறவாமல், தவறாமல் கைக்கொண்டு நடக்க நமக்கு முயற்சியும், பயிற்சியும் அவசியமாகிறது, ஆமென். நன்றி - வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu - South India.

ஆண் மக்களுக்கு கர்த்தரின் எச்சரிக்கை! சுவி.பாபு T தாமஸ்

 


ஆண் மக்களுக்கு கர்த்தரின் எச்சரிக்கை!

புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன். ஏசாயா : 13 :12 கர்த்தர் எச்சரிக்கிறார், ஆண் மக்களை அபூர்வமாக்குவேன் என்று சொல்லுகிறார். எப்படி? அபூர்வமாக்குவேன் என்றும் நமக்கு விளக்கமும் தருகிறார். கவனியுங்கள், அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். ஏசாயா : 4 : 1 இதன் அர்த்தம் என்னவென்றால், ஏழு பெண்களுக்கு ஒரு ஆண் எனும் விதிகாச்சார அடிப்படையில் ஆண் மக்களின் ஆதிக்கத்தை குறைப்பேன் என்று சொல்லுகிறார். அதாவது 7 : 1 என்கிற சூழலுக்கு ஜனத்தொகையில் மாற்றங்கள் நிகழும் என்று கர்த்தர் சொல்லுகிறார். பொதுவாக 1 : 1 என்பதே ஜனப்பெருக்கத்தின் அடிப்படை கோட்பாடாகும். இதை தான் ஆண்டவர் ஆதியில் ஆதாம் + ஏவாள் என்று உருவாக்கினார். ஆனால் அதுவே நாளடைவில் 1000 ஆண்களுக்கு 994 பெண்கள் அல்லது 1000 பெண்களுக்கு 994 ஆண்கள் என்கிற ரீதியில் மாற்றங்கள் வரத்துவங்கியது. இதில் இன்னும் பல இடங்களில் 4 - 5 % ஏற்ற இறக்கங்களோடு இருப்பதை கவனிக்க முடியும். ஒரு அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பு வரை பெண்களை வீட்டின் படி தாண்ட விடாமல் பாதுகாக்கப்பட்டார்கள். ஆனால் தற்போதைய நிலைமை தலை கீழ் மாற்றம். ஒரு காலம் வரைக்கும் இது ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியது என்று சிலப்பல வேலைகள் இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை, பெண்கள் செய்ய முடியாதது என்று எதுமே இல்லை என்கிற நிலைமை வந்து விட்டது. இன்று வானுர்தி துவங்கி கப்பல், இரயில், கனரக வாகனங்கள் ஆட்டோ ஓட்டுவது வரை அனைத்துத் துறைகளிலும் முன்னேறி விட்டார்கள் பெண்கள். ஆனால் ஆண்களின் நிலையோ பரிதாபகரமாக மாறிவிட்டது. இன்று பெண்கள் ஆண்களுக்கு போட்டியாளர்களாகவும் அதற்கும் மேலாகவும் வளர்ந்து விட்டார்கள். தமிழ் நாட்டின் புள்ளிவிவரக்கணக்கின்படி 2023 ல் ஆண்களில் மதுக் குடிப்பவர்கள் எண்ணிக்கை 18 %, ஆனால் அதுவே சமீபத்திய கணக்கின் படி 32.8 % என்று உயர்ந்துக் கொண்டே போகத்துவங்கி விட்டது. இது போதாதென்று பல ஆண்கள் பல்வேறு வியாதிகளால், பல்வேறு தவறான பழக்க வழக்கங்களாலும் பீடிக்கப்பட்டு ஒதுங்கி இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இன்று பெரும்பாலான குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களே அதிகம். கணவனை இழந்த தாய் தான் குடும்பங்களை பராமரிக்கும் அவல நிலை இங்கு அதிகம். திருமணமான பெண்களில் பலர் தங்களுக்கு வாரிசு வேண்டி கருத்தரிக்கும் மையங்களையே நம்பியிருக்கும் சூழலும் வெகுவாக பெருகிவருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஏன் இந்த நிலை என்று ஒருவரும் சிந்திக்க வில்லை. கர்த்தர் ஆண்களுக்கென்று விசேஷமான அந்தஸ்தை கொடுத்திருந்தார். முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக. யாத்திராகமம் : 22 : 29 இதன் முக்கியத்துவத்தை குடும்பங்களும் கண்டுக்கொள்ளவில்லை, ஆண் பிள்ளைகளும் உணர்ந்துக்கொள்ள வில்லை. இது போதாதென்று பெரும்பாலான ஆண் மக்கள் கர்த்தரை உதாசீனப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இதை நாம் ஓய்வு நாள் ஆராதனையில் நம்முடைய சபைகளில் மிகத் தெளிவாக காணமுடியும். மிகச் சிறிய அளவிலான எண்ணிக்கையில் ஆண் மக்கள் நம்முடைய திருச்சபைகளில் கலந்துக்கொள்ளுவது வேதனையிலும் வேதனை. இது மாத்திரமில்லாமல் ஆண்கள் குடும்பங்களில் எண்ணப்படாமல் போகும் சூழலும் பெருகுவதை காணமுடிகிறது. இவை அனைத்தையும் ஆண்கள் கவனத்தில் கொண்டால் நல்லது, ஆமென்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu.

யார் எனக்கு தலைவன்! சுவி.பாபு T தாமஸ்

 


யார் எனக்கு தலைவன்!

கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி ஒட்டு மொத்த அறிவு சார் சமூகத்துக்கும் வளர்ந்த நவ நாகரிக சமூகத்திற்கும் ஒரு கருப்பு நாள் என்றால் அது மிகை அல்ல. ஆம் அன்றைய தினம் ஒரு பிரபல நடிகரை காண பெரும் திரளான மக்கள் கூட்டம் கூடி அத்தியாவசிய தேவைகள் ஏதுமின்றி, இயற்கை உபாதைகளை கழிக்கவோ, நிழலுக்கு ஒதுங்கவோ ஏதுமின்றி மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடிக்க மக்கள் நெரிசலின் காரணமாக சிறுவர்கள், பிள்ளைகள் மற்றும் பெண்கள் ஆண்கள் என்று 41 விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோனது மாத்திரமல்ல நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவ சிகிழ்சை பெறுமளவுக்கு மிகப்பெரிய விபத்து
கரூரில் நடைபெற்றது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்தார்கள், தங்கள் சொந்த வீட்டில் ஏற்பட்ட பெரும் இழப்பாக கருதி வருந்தினார்கள்.
இவ்விழப்பு ஏன் நடந்தது? சற்றே நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். உதாரணத்திற்கு ஒரு இரண்டு சம்பவங்களை முன்வைக்க விரும்புகிறேன். 1. ஒரு இளம் வயதை ஒத்த நபர் ஒருவர், கரூர் மக்கள் நெரிச்சலில் பெரும் இழப்பை சந்தித்த அந்த நபர் கண்ணீரோடு தெரிவித்த கருத்து மற்றும் கைபேசியில் பதிவான உரையாடலில், அந்த நபர் தன் மனைவியை கைபேசியில் அழைத்து எச்சரித்திருக்கிறார். " கூட்டம் அதிகமாக இருக்கிறது, மகள் எப்படி தாங்குவாள், வந்து விடுங்கள்" என்று கூறிய கணவருக்கு மனைவியின் பதில் "நாங்கள் விஜய்யை பார்க்காமல் வரமாட்டோம் மாமா, நீங்களே சாப்பாட்டை போட்டுகொண்டு சாப்பிடுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார். மீண்டும் அழைத்தப்போது காவலர் ஒருவர் மறுமுனையில் இருந்து அந்த நபரை மருத்துவமனைக்கு வருமாறு அழைக்க அங்கே இருவரும் அகால மரணம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் தெரிவித்தது என்னவென்றால், அதே மாதத்தில் அவர்களது இளைய மகளை அவரின் சுகவீனத்தின் காரணமாக மருத்துவர்கள் சிகிழ்சை அளித்தும் பலனளிக்காமல் மரணித்த ரணம் ஆறுவதற்குள் மனைவி மற்றும் தன் முத்த மகளை இப்படி அநியாயமாக
இழந்து விட்டேன். இனி நான் யாருக்காக வாழவேண்டும் என்று ஆற்றொண்ணா துயரத்துடன் கண்ணீர் மல்க நின்ற அவருக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்.
2. ஒரு இளம் தாய் பேட்டி ஒன்றில் விஜய் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர், கில்லி மற்றும் ஒரு திரைப்பட பேரை சொல்லி அவரை போல் யாரும் இருக்க முடியாது. எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும், என் மகனுக்கு அவருடைய தந்தையைவிட விஜய் மீது அபாரமான பாசம். அவரை விஜய் என்று சொல்லுவதை கூட விரும்பமாட்டான், தளபதி என்று தான் அழைப்பான். அவர் குறைந்த பட்சம் எதிர் கட்சி தலைவராக அமருவார். அவர் முதலமைச்சராக வரும் பொழுது வேளாங்கண்ணியில் நான் தலை மொட்டை அடித்துக் கொள்ளுவேன், இது என் பிரார்த்தனை. இது போல ஏராளாமான காட்சிகள் வளம் வந்த வண்ணம் இருக்கிறது. மக்கள் சிந்திக்க வேண்டும், ஒரு தலைவன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாத ஆட்டுமந்தை கூட்டம், அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
ஒரு புறம் ஈடு செய்ய முடியாத இழப்பு, மறு புறம் அறியாமையில் மக்கள். ஒரு பெரும் சமூகமே அறியாமையிலும், மடமையிலும் சிக்கி இருப்பது 21 நூற்றாண்டின் கொடுமை. திருவாளர் விஜய் அவர்கள் ஒரு நல்ல நடிகர், அது அவரின் தொழில். ஒரு நடிகர் தலைவராக முடியாது என்று சொல்லவில்லை. நிச்சயம் ஒரு தலைவருக்கான தகுதியுடைய யாரும், அவர் எப்பேர்பட்ட பின் புலத்திலிருந்து வருபவராக இருந்தாலும் அவர் தலைவராகலாம் இதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தலைவருக்கான தகுதி ஒருவருக்கு மிக மிக அவசியம். ஒரு தாய் தன் பிள்ளை தனது கணவனை / பிள்ளையின் தகப்பனை கனவீனப்படுத்துகிறான் என்று புரியாத தாயால் எப்படி ஒரு தலைவனை அடையாளம் காண முடியும். பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது 'உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக' இது கடவுளின் கட்டளையில் ஒன்று. பெற்றோர் தான் பிள்ளைக்கு வழிகாட்ட வேண்டும்.
பிள்ளைக்கு நடிகர் விஜய் பிடிக்கும் என்பதற்காக அவர் தலைவராகிவிடுவாரா? தனது தொழில் காரணாமாக கதாபாத்திரத்திற்கு ஏற்ப வேஷம் மாறும் ஒருவர் தலைவர் எனும் அந்தஸ்தை பெறுவது சாத்தியமா? சரி இப்படி சிந்திப்போம், நடிகர் விஜய் ஹிரோ எல்லோருக்கும் பிடிக்கும் பண்புகளில் தன் திறமையை வெளிப்படுத்துகிறார். அதே விஜய் அவர்கள் வில்லன் பாத்திரம் ஏற்று காலித்தனம் செய்வது போல் நடித்திருந்தால் விஜய் அவர்களை தலைவராக கொண்டாடுமா? இந்த சமூகம். ஒருவரின் தொழில் வேறு, அவரின் இயல்பு என்பது வேறு. தலைமை பண்பு கொண்ட ஒருவர் நடிகராகவோ அல்லது வேறு பல தொழில் / பணிசெய்பவராக இருக்க முடியும்.
அதே நேரத்தில் தலைமை பண்புள்ளவருக்கென்று தனி இலக்கணம் உண்டு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தலைமை பண்புகளின் மொத்த உருவமாகவே இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்தார். அவர் நமக்கு மாதிரியை வெளிப்படுத்தி இந்த பூமியில் வாழ்ந்தார். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். யோவான் : 13 : 15. ஒரு தலைவனின் முதல் தகுதி என்பது, சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். அனைவரையும் சமமாக பாவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நல்லத் தலைவன் என்பவன் ஒரு நல்ல வழிக்காட்டி, முன்யோசனையும், தொலைநோக்குப் பார்வை கொண்டவானால் மட்டுமே தலைவனாக சோபிக்க முடியும். தியாக உள்ளமும் இரக்க மனப்பான்மை கொண்டவனே நல்லத் தலைவன். மக்களோடு மக்களாக வாழ்ந்து கேள்வி ஞானத்தோடு சிந்தித்து செயல்படுபவன் நல்ல தலைவனுக்கு தகுதியுள்ளவர். நன்றி, வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu, South India.

ஞாயிற்றுக் கிழமை! சுவி.பாபு T தாமஸ்

 ஞாயிற்றுக் கிழமை!

ஞாயிறு என்பது துயில், உதயம் என்றெல்லாம் பொருள் கொடுப்பது போல், வாரத்திற்கு முதல் நாளான இன்று ஞாயிற்றுக் கிழமை என்று அமையப்பெற்றிருப்பதில் வியப்பேதும் இல்லை. ஒவ்வொரு நாளும் உதயமாகிற பொழுது எப்படி உலகத்திற்கும் உலக மக்களுக்கும் அந்த நாள் விசேஷமோ, அவ்வாறு ஒவ்வொரு வாரத்தின் முதல்நாளாகிய ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாகிய நம் எல்லோருக்கும் மகிழ்ச்சித் ததும்பும் நாள் என்றால் மிகையல்ல என்பது உண்மையே. ஞாயிற்றுக் கிழமை என்ற உடன் பெரும்பாலான கிறிஸ்தவ குடும்ப அங்கத்தினர்கள் நினைவில் தாண்டவமாடும் நினைவு என்பது தேவாலயம் செல்லவேண்டும் என்கிற அந்த உணர்வு தான் மாத்திரமல்ல நம் எல்லோருக்கும் மன உற்சாகத்தின் நாளும் பரப்பரப்பின் நாளும் அதுவே. நான் சிறுவயதில் பெங்களூர் பட்டினத்தில் கல்விப்பயின்ற சமயத்தில் காக்ஸ் டவுன் பகுதியில் அமைந்திருக்கும் பெரிய பரிசுத்த பேதுரு தேவாலயத்தில் சில வருடங்கள் ஆல்டர் பாயாக பணியாற்றிய அனுபவமுண்டு. இவ்வாலயத்தில் கிராஸ் பேரராக இருந்து சிலுவையை சுமக்கும் அனுபவமும் பெற்றிருக்கிறேன். அச்சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை என்றால் மிகுந்தப் பரபரப்பு எனக்குள் தொற்றிக் கொள்ளும். நான் வசித்து வந்த முனீரெட்டிப்பாளையத்திற்கும் காக்ஸ் டவுன் பகுதிக்கும் இடைப்பட்ட தூரம் என்பது சுமார் 7 - 8 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். ஆலய ஆராதனை நேரம் 8 மணி என்றால் நான் ஒரு இருபது நிமிடம் முன்னால் ஆலயம் சென்றுச் சேரவேண்டும். ஆகவே ஓட்டமும் நடையுமாக அந்த தூரத்தை நான் கடந்தாக வேண்டும். சிலர் பரிதாபப் பட்டு மிதிவண்டியில் பயணிப்போர் உதவினால் அதிசயம். கர்த்தர் மரணம் எனும் துயிலிலிருந்து மீண்டு எழுந்து மகதலேனா மரியாளுக்கு, தமது சீடர்கள் சிலருக்கும் காட்சி தந்தனால் இந்த நன்னாள் நமக்கு விசேஷம்.
கர்த்தர் ஜீவனோடு இருப்பவராக கண்டு மகிழும் நாள் ஞாயிறாகிய இந்த நன்னாளே. உலகம் இந்த நாளை Holiday என்று கொண்டாடுகிறது. நாமோ இந்த நாளை Holy day பரிசுத்த நாள் என்று பாவித்து கர்த்தரை கனப்படுத்துகிற, தொழுதுக் கொள்ளுகிற மனமகிழ்ச்சியின் நாளாக எண்ணி கொண்டாடுகிறோம். பரிசுத்த வேதாகமம் ஆறுநாள் மனிதன் தன்பணிகளை கவனிக்கவும், ஏழாம் நாளை ஓய்வு நாளாக கர்த்தர் எவ்வாறு தன் படைப்பின் பணியை ஆறுநாளில் நிறைவுச் செய்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தது போல நாமும் அவ்வாறே ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து சகலத்தையும் படைத்து ஆண்டு வழிநடத்திவரும் நம்முடைய ஆண்டவரை தொழவேண்டும் என்று நம்மை பணித்தார். நாமும் அந்நாளை நினைவுக் கூறத்தக்கதாக பரிசுத்த நாளாக முதலாம் நாள் எனும் ஞாயிறுக் கிழமையில் தேவனை உலகமனைத்திலும் ஒரு சேர தொழுது வருகிறோம். எனவே ஒவ்வொரு வாரமும் இந்த நாளுக்காக ஏங்குகிறோம், காரணம் இந்த நாள் நமக்கு கர்த்தரை மகிமைப் படுத்தும் நாள். நீண்ட நாள் தேடலுக்கும் காத்திருப்பிற்குப் பிறகு கிடைத்த பொக்கிஷம் போல் ஓர் உணர்வு பெறுகிறோம். கர்த்தரை தேவாலயத்தில் நமது ஆராதனை வேளையில் காணும் உணர்வு பெறும்போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி பிரவாகிக்கும் நாளாக நமக்கு அமைகிறது. திங்கள் துவங்கி சனிக்கிழமை வரை நாம் பெற்ற அனைத்து நல்ல மற்றும் கசப்பான உணர்வுகளை ஆண்டவர் பாதத்தில் இறக்கி வைத்து கர்த்தரின் புதிய கிருபைகளையும், புதிய பெலனையும் பெற்றுக்கொள்ளும் நாளாகவும் இந்நாள் நமக்கு அமைந்திருக்கிறது. உலகமும் அதிலுள்ள அனைத்து ஜீவ ராசிகளும் குறிப்பாக மனுக்குலத்தை படைத்தவராகிய அவரின் மகத்துவத்தை எண்ணி துதிக்கும் நன்னாள் இந்நாள். ஒரு கவிஞன் ஞாயிறை கண்ணாக வர்ணிக்கிறான். அவ்வாறே நம் சரீரத்திற்கு கண் என்பது பிரதானமானது போல ஞாயிற்றுக் கிழமையாகிய இந்த நாளை நாம் அனைவரும் கண்ணென பாவித்து எல்லோரும் மன உற்சாகமாய் எழுந்து நம்மை படைத்த நல்ல கர்த்தரை மனமகிழ்ச்சியோடு தொழுது மகிழ தேவாலயம் நோக்கி புறப்படுவோம், ஆமென். நன்றி, வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,

Ranipet - 632 401, Tamil Nadu, South India.

உயிர் காக்கும் அவசர ஊர்தி! Ambulance! சுவி.பாபு T தாமஸ்

 


உயிர் காக்கும் அவசர ஊர்தி! Ambulance!

ஆனால் இன்றோ ஆம்புலன்ஸ் எனப்படும் உயிர் காக்கும் அவசர ஊர்தி சமீபக்காலமாக அரசியல்வாதிகளால் விமர்சனத்திற்குள்ளாவதும், அதன் ஓட்டுனர்கள் தாக்கப்படுவது வாடிக்கையாகியுள்ளது. பொதுவாக நாம் படிக்கின்ற காலத்தில் சாலையை கடக்கும்பொழுது ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால் அதற்கு முதலில் வழிவிடவேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அவ்வண்ணமே சாலையில் நாம் பயணிக்கும் பொழுது போக்குவரத்து காவலர்களோ அல்லது பொது ஜனமோ ஆம்புலன்ஸ் சிவப்பு சுழல் விளக்கோடு கூடிய ஒலிச்சத்தம் கேட்டவுடன் நாம் எச்சூழலில் இருந்தாலும் உடனடியாக அவ்வாகனத்திற்கு
வழி விடுவது வாடிக்கை, காரணம் மனித உயிரின் மதிப்பறிந்தவர்களாக நாம் வளர்த்தெடுக்கப்பட்டோம். ஆனால் இன்றோ ஆம்புலன்ஸ் வாகனத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் சூழல் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது பிரச்சார வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டப் பொழுது ஓரிடத்தில் மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆம்புலன்ஸ் வாகனம் சாலையை கடக்க முற்பட்டப் பொழுது ஆம்புலன்ஸ் வாகனத்தை குறித்து விமர்சித்து, அவ்வாகன ஓட்டியை மிகக் கடுமையாக எச்சரித்தார். இதை தொடர்ந்து அவருடைய தொடர் சுற்றுப்பயணத்திற்கிடையே அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் அதிமுகவின் தொண்டர்களால் தாக்கப்பட்டார்கள் என்றச்செய்தியினை தினசரி பத்திரிக்கை வாயிலாகவும் தொலைகாட்சியின் செய்தி வாயிலாகவும் பார்த்தோம். கடந்து சில தினங்களுக்கு முன்னர் திருவாளர் விஜய் அவர்களின் சுற்றுப்பயண கூட்டம் கரூரில் நடைப்பெற்றது. அந்த கூட்ட நெரிச்சலில் சிக்கி 41 பேர் அகால மரணம் அடைந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த செய்தி அனைவரும் அறிந்ததே. அச்சமயத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்டார்கள். அதில் ஒருவர் அந்த கூட்டநெரிச்சலில் ஒரு பெண் தனது ஆடைகள் களைந்து விட தனது மேல்ச்சட்டையை கழற்றிக்கொடுத்து அப்பெண்ணின் மானத்தை காப்பாற்றியதும் அன்றி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்த அந்த நபரும் தாக்கப்படுகிறார் என்றால் நாம் எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குகிறோம் என்று யோசிக்க வேண்டாமா? அங்கே எடப்பாடி அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை விமர்சிக்கிறார் இங்கே கரூரில் விஜய் அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை விம்சிக்கிறார். உண்மை இருப்பின் எவரும் விமரிசிப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் பொறுப்பானவர்கள் செய்த பொறுப்பற்ற செயலால் இன்று உயிர் காக்கும் அவசர ஊர்திக்கு வந்திருக்கும் ஆபத்தை பொது ஜனம் கவனிக்கத் தவறியிருக்கிறது. இதில் அபூர்வமாக விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஒரு பேட்டியில் " இது என்ன மாதிரியான மனநிலை, எங்கள் கூட்டங்களில் கூட ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு அனுப்பியிருக்கிறோம்" என்றார். நாம் யோசித்துப் பார்க்க வேண்டாமா? பொது பயன்பாட்டிற்கான சாலைகளை அரசியல் அக்கட்சியினர் தங்கள் பிரச்சாரத்திற்காக அக்கிரமித்துக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களையும் அதன் ஓட்டுனர்களை விமர்சிக்கலாமா? சாலைகளில் நடத்தப்படும் கூட்டங்களால் பொது ஜனம் எவ்வளவு சிரமங்களுக்குளாகிறார்கள் என்று ஏன் எவருமே யோசிப்பதே இல்லை. இது தான் மக்களுக்கு சேவை செய்யும் லட்சணமா? கடந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் 8 மணியளவில் கோவில் கும்பாபிஷேகம் என்றுச் சொல்லி சுமார் 2 மணி நேரம் மொத்த போக்குவரத்தும் சோளிங்கர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பிரதான சாலை பக்தர்களால் அக்கிரமிக்கப்பட்டு போக்கு வரத்து முற்றிலும் முடங்கியது. அந்த சாலை தான் சித்தூர்- பள்ளிப்பட்டு - திருத்தணி மார்க்கத்திற்காக வாயில், எவ்வளவு மக்கள் தங்கள் சுய வாகனங்களிலும், பேருந்துகளிலும் அமர்ந்துக்கொண்டு சிரமப்பட்டார்கள் என்று நான் அறிவேன். ஏன் இதுபோன்ற கூட்டங்கள் சாலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் நடத்த அரசாங்கம் அனுமதி அளிக்கிறது. ரோமர்களின் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற கூட்டங்களுக்கென்ற பிரத்தியேக இடங்களை தேர்வுச் செய்து மேடைகள் அமைத்துக் கொடுத்து பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி கருத்து பரிமாற்றம் நடைபெற்றதாக ஏடுகள் நமக்கு தெரிவிக்கின்றன. இந்த நவீன காலத்தில் பொது ஜனம் இன்னல்களுக்கு உள்ளாவது அனுமதிக்கமுடியாது. இராணிப்பேட்டையில் சந்தைப்பகுதியில் இது போன்றதொரு பிரத்தியேக கூட்டங்களுக்கென்ற மேடை ஒன்று அமைக்கப்பட்டு பாழாய்ப்போனது தான் மிச்சம். நன்றி, வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu, South India.

பேராசையில் விளைந்த பெரும் வினை! சுவி.பாபு T தாமஸ்

 


பேராசையில் விளைந்த பெரும் வினை!

Karur human stampede was a tragedy due to human rights violation. நம் எல்லோருக்கும் பொன் முட்டையிடும் வாத்துக் கதை தெரியும். ஒரு குடியானவன் வளர்த்துவந்த வாத்து அவனுக்கு தினம் ஒரு பொன் முட்டையிட்டு அவன் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருந்தது. ஆனால் பேராசை கொண்ட அந்த குடியானவன் பெரும் செல்வந்தனாக விரும்பி வாத்தை அறுத்து விட முதலுக்கே மோசம் வந்தது போல் நடிகராக வளர்ந்து அரசியல்வாதியாக பரிணாமிக்கத்துவங்கிய திருவாளர் விஜய் அவர்களின் வாழ்வில் அவர் நினைத்ததற்கு எதிராக அமைந்து விட்டது. தமிழக வெற்றிக் கழகத்தினர் கரூரில் கூட்டம் நடத்த எத்தனித்தப் போதே இதற்கு முன்னால் நடத்திய கூட்டங்களில் திரண்ட கூட்டத்தை குறிப்பால் கணித்து கரூர் கூட்டத்தை பல முனை கூட்டங்களாக குறைந்த பட்சம் 4 அல்லது 5 முக்கிய பகுதிகளாக கணித்து பிரித்து நடத்த முற்பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். இதற்கு வாய்ப்பு இல்லை காரணம் இவர்கள் கூட்டம் நடத்துவதே பெருமளவில் கூட்டம் சேர்த்து மாஸ் காட்டுவதே நோக்கமெனில் இதற்கு வாய்ப்பே இல்லை தான். சரி இதையும் மீறி தவெகவினர் செய்த பிழையும் அதனால் விளைந்த வினையும் என்ன வென்று பார்போம். ஒன்று அக் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்து அவர்கள் தொண்டர்களுக்குச் கொடுத்த அறிவிப்பு அதாவது கூட்டம் நடத்த தேர்வாகியுள்ள இடத்திற்கு திரு. விஜய் அவர்கள் பிற்பகல் 12. 30 மணி என்று செய்த அறிவிப்பாகும். இதனால் ரசிகர்கள் நேரப்பட சாப்பிட்டும் சாப்பிடாததுமாக வேலுச்சாமிபுறத்தில் குவியத் துவங்கி விட்டனர். ஆனால் அப்பகுதியில் குடிநீர், வெயிலுக்கு ஒதுங்க தோதான இடமோ, கழிப்பறை வசதியோ, உணவோ ஏதுமில்லாதப் போது சுமார் 7- 8 மணி நேரம் கால் கடுக்க நின்றால் என்னவாகும்? நல்ல திடகாத்திரமான வாலிபர்களுக்கே இச்சூழல் சாத்தியமில்லாதப்போது குழந்தைகள், சிறுபிள்ளைகள், பெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். ஆனால் இங்கே ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை, அதாவது மின்விசிறி அமைத்துக் கொடுத்து, இருக்கைகள் கொடுத்து, குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி எல்லாம் அமைத்துக் கொடுத்து அழைத்தால் யாரும் வருவதில்லை. ஆனால் இங்கு மட்டும் வெயில் உஷ்ணம் என்றும் பாராமல் கால் கடுக்க நின்றார்கள் என்றால் அது அவர்களுக்கே வெளிச்சம். இரண்டாவதாக, கூட்டம் கட்டுக் கடங்காமல் சாலையின் இரு புறமும் நிரம்பி வழிய கூட்டத்திற்குள் விஜய் அவர்களின் பிரச்சாரப்பேருந்து நுழைக்கப் பட்டிருக்கிறதே இது எப்படி? அவ்வாறு நுழையலாமா? அப்படி நுழைந்தால் என்னவெல்லாம் ஆகும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சிந்தித்திருக்க வேண்டும் அல்லது திருவாளர் விஜய் அவர்கள் யோசித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் நான் தவறேதும் செய்யவில்லை என்று சொல்லுவது எப்படி? இத்துணை பெரிய மனித உரிமை மீறல் நடந்திருக்க மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தில் விசாரணையை ஆரம்பிக்காமல் பொறுப்பை தட்டிக்கழித்து நியாயமா? என்று நாம் அனைவரும் சிந்துத்துப் பார்க்கவேண்டும். ஆனால் இத்தனை கோரத்திற்குப் பிறகும் விஜய் அவர்களின் பின்னால் நிற்க அழைப்புக் கொடுக்க துணியும் நபர்களை நாம் என்ன வென்று சொல்ல... குறைந்தப் பட்ச மனித நேயம் உள்ளவர்கள் எவரும் அவ்வாறு செய்யவே மாட்டார்கள். நல் வாய்ப்பாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை முற்றுப் பெற்று அவர்தம் வீடுகள் திரும்பியிருக்கிறார்கள். அவ்வாறே மற்றவர்களும் நலமுடன் தங்கள் வீடுகள் திரும்ப பிரார்த்திப்போம். நன்றி, வணக்கம்
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu.